12 ராசிக்கான அதிர்ஷ்ட கல் – எந்த ராசிக்காரர்கள் எந்த ராசிக்கல் அணிய வேண்டும்?

12 ராசிக்கான அதிர்ஷ்ட கல் – எந்த ராசிக்காரர்கள் எந்த ராசிக்கல் அணிய வேண்டும்?


12 ராசிக்கான அதிர்ஷ்ட கல் உங்கள் ராசிக்கான சரியாக ராசிக்கல் எது என்பதை உங்களுக்கு கூறுகிறோம். ஆனால், ராசிக்கல்லை அணிவதற்கு முன் ஜோதிடரை அணுகுவது நல்லது. அது உங்களுக்கு சரியான வழிகாட்டுதலை வழங்கும். நாம் செய்யும் சிறிய தவறு கூட நமக்கு பெரிய விளைவை ஏற்படுத்தும் என்பதை நினைவில் வைக்கவும்.

மேஷம் ராசிக்கான அதிர்ஷ்ட கல் :

மேஷத்திற்கான ராசிக்கல் பவளம். செவ்வாய் கிரகத்தை ராசிநாதனாக கொண்டவர்கள் பவள கற்களை அணியலாம். இதை அணிந்தால் உங்களுக்கு தெய்வ அனுகூலம் கிடைக்கும். மேலும், இது கோபத்தைக் குறைத்து மன நிம்மதியை தருவதுடன், நல்ல அதிர்ஷ்டத்தையும் கொடுக்கும். சிவப்பு பவளம் நல்லறிவையும், துணிவையும் கொடுக்கும். தீய சிந்தனைகளை நமது மனதுக்குள் அனுமதிக்காது. மன தைரியத்தை கொடுக்கும். தொழிலில் நல்ல வெற்றி கிடைப்பதுடன், பதவி உயர்வுக்கும் வழிவகுக்கும்..

ரிஷபம் ராசிக்கான அதிர்ஷ்ட கல் :

சுக்கிரன் ஆளும் ரிஷப ராசிக்காரர்கள், அணியவேண்டியது வைரம். சுக்கிர திசை நடப்பவர்களும் வைரம் அணியலாம். இதை அணிந்தால் நல்ல மகிழ்ச்சி கிட்டும். உங்களுக்கு வசீகரமான தோற்றத்தை கொடுக்கும். நல்ல அதிஷ்டம் உருவாகும். உடல் மற்றும் மனதுக்கு நல்ல ஆற்றலை தரக்கூடியது. வெற்றி, செல்வம், அதிர்ஷ்டம் போன்றவற்றை கொடுக்கும். நல்ல தன்னம்பிக்கையைத் தரக் கூடியது. ஆண்- பெண் உறவை வலுப்படுத்துவதுடன், நல்ல தூக்கத்தைக் கொடுக்கக் கூடியது.

மிதுனம் ராசிக்கான அதிர்ஷ்ட கல் :

மிதுன ராசியில் பிறந்தவர்களை ஆளுவது அறிவார்ந்த கிரகமான புதன். மரகதம் புதனுக்கான ராசிக்கல் மற்றும் இந்த விலைமதிப்பற்ற ரத்தினத்தை அணிபவர்களுக்கு சகல பாக்கியமும் கிடைக்கும். புதன் திசை நடப்பவர்களும் மரகதம் அணியலாம். இது தொழில் வளர்ச்சியை கொடுக்கும். நல்ல அதிர்ஷ்டம் தரும். நல்ல கற்பனை வளத்தைக் கொடுப்பதுடன், மலட்டுத்தன்மையைப் போக்கும். அதுமட்டும் அல்ல, ரத்தினம் தீய சக்திகளிடம் இருந்து நம்மைக் காக்கும். நல்ல கல்வியைக் கொடுக்கும். பேச்சாற்றல் மற்றும் நினைவாற்றலைப் பெருகும் .

கடகம் ராசிக்கான அதிர்ஷ்ட கல் :

எச்சரிக்கை கிரகமான சந்திரன் கடக ராசிக்காரர்களை ஆளுகிறது. வளர்பிறை சந்திரனுக்கு உகந்தது முத்து. கடக ராசிக்காரர்கள் இந்த கிரகத்தைப் போலவே மிகவும் உணர்ச்சிகரமான வாழ்க்கையைக் கொண்டுள்ளனர். எனவே, ‘முத்துக்கள்’ உணர்ச்சிக் கொந்தளிப்பை அமைதிப்படுத்த உதவுகின்றன. சந்திர திசை நடப்பவர்களும் முத்து அணியலாம். இது செல்வ விருத்தியைக் கொடுக்கும். அமைதியையும், மகிழ்ச்சியையும் தரும். இது, ஆண்களுக்கு தன்னம்பிக்கையையும், பெண்களுக்கு பாதுகாப்பு உணர்வையும் தரும். தம்பதிகளுக்கிடையே ஒற்றுமையைத் தரும். நீண்ட ஆயுளைத் தருவதுடன் உறவுகளை வலுப்படுத்தும்.

​சிம்மம் ராசிக்கான அதிர்ஷ்ட கல்:

சிம்மம் சூரியனால் ஆளப்படுகிறது மற்றும் சூரியனுக்கான ராசிக்கல் ரூபி. சூரிய திசை நடப்பவர்களும் மாணிக்கம் அணியலாம். இது நல்ல அதிர்ஷ்டத்தைத் தரும். வாழ்வில் உயர்வைத் தரும். மாணிக்கம் புத்திசாதுர்யத்தைத் தருவதுடன் நீண்ட ஆயுளையும் கொடுக்கும். மன உறுதியையும், தன்னம்பிக்ககையையும் தரும். கருத்து வேறுபாடுகளை போக்கி, நல்ல தூக்கத்தைத் தரும். உணர்ச்சி வசப்படுதலைக் கட்டுப்படுத்தும். நினைவாற்றலை அதிகப்படுத்தும். தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும்.

கன்னி ராசிக்கான அதிர்ஷ்ட கல் :

புதனால் ஆளப்படும் இரண்டாவது ராசியான கன்னிக்கு உகந்த ரத்தினம் மரகதம். சுக்கிர திசை நடப்பவர்களும் மரகதம் அணியலாம். இது தொழில் விருத்தியையும், அதிர்ஷ்டத்தையும் அளிக்க வல்லது. மலட்டுத் தன்மையைப் போக்கும். சிறந்த கல்வியைக் கொடுக்கும். அத்துடன், பில்லி, சூனியங்களில் இருந்து நம்மைக் காக்கும். பேச்சாற்றலை வளர்க்கும். மரகதக் கல் புத்துணர்ச்சியைக் கொடுக்கக் கூடியது.

துலாம் ராசிக்கான அதிர்ஷ்ட கல் :

சுக்கிரனால் கட்டுப்படுத்தப்படும் இரண்டாவது ராசி துலாம். இந்த ராசியில் பிறந்தவர்கள் தங்கள் திறமையில் அதிக படைப்பாற்றல் மிக்கவர்கள், ஆனால் அதே நேரத்தில் அவர்களின் வாழ்க்கையில் நிறைய ஏற்ற இறக்கங்கள் இருக்கும். துலாம் ராசிக்காரர்கள் அணிய வேண்டியது வைரம். சுக்கிர திசை நடப்பவர்களும் வைரம் அணியலாம்.

இது மகிழ்ச்சியையும், யோகத்தையும் தரக்கூடியது. வாழ்நாள் முழுவதும் நல்ல வசீகரத்தைத் தரும். தன்னம்பிக்கையை வளர்க்கும். ஆண்-பெண் உறவை வலுப்படுத்தும். நல்ல தூக்கத்தை தரும். பிறருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளைப் போக்கும். பேச்சாற்றலை வளர்க்கும். வெளிநாடுகளுக்குச் செல்லும் வாய்ப்புகள் அதிகம்.

மேலும் படிக்க : 12 லக்கின பாவக பலன்கள்

விருச்சிகம் ராசிக்கான அதிர்ஷ்ட கல்:

செவ்வாய் ஆளும் விருட்சிக ராசிக்காரர்கள் அணிய வேண்டியது பவளம். செவ்வாய் மற்றும் கேது திசை நடப்பவர்களும் பவளம் அணியலாம். இதை அணிந்தால் தெய்வ கடாட்சம் கிடைக்கும். கோபம் குறைந்து, அதிர்ஷ்டம் உண்டாகும். நல்ல துணிச்சலைத் தரும். பொறாமை, வெறுப்பு போன்ற தீய குணங்களைப் போக்கி ஞானத்தைக் கொடுக்கும். பயத்தை போக்கும். தொழில் செய்யும் வாய்ப்புகள் உருவாகும்.

தனுசு ராசிக்கான அதிர்ஷ்ட கல் :

வியாழன் ஆளும் தனுசு ராசிக்காரர்கள் அணிய வேண்டியது கனக புஷ்பராகம். குரு திசை நடப்பவர்களும் புஷ்பராகத்தை அணியலாம். இதை அணிந்தால் மன நிம்மதியைக் கொடுக்கும், நல்ல செல்வத்தைக் கொடுக்கும். இந்தக் கல் அணிவது நமக்கு கம்பீரத்தை கொடுப்பதுடன், துணிச்சலை ஏற்படுத்தும். மேலும், பொருளாதாரத்தில் முன்னேற்றம் உண்டாகும். திருமணத் தடை நீங்கும். வீடு கட்டும் வாய்ப்பு உண்டாகும்.

மகரம் ராசிக்கான அதிர்ஷ்ட கல் :

மகரம் சனியால் நிர்வகிக்கப்படும் இராசி அடையாளம். மகர ராசிக்காரர்கள் அணிய வேண்டியது நீலக்கல். சனி திசை நடப்பவர்களும் நீலக்கல் அணியலாம். இதை அணிந்தால் சமூகத்தில் நம் செல்வாக்கு உயரும். தெய்வீக சிந்தனையைத் தரும். நல்ல செல்வ வளத்தைக் கொடுக்கும். நினைத்தது நடக்கும். உடல்பலத்தை அதிகரிக்கும். பகையைப் போக்கக் கூடிய சக்தி இதற்க்கு உள்ளது. வம்பு, வழக்கு இருந்தால் நமக்குச் சாதகமான சூழலை உருவாக்கும்.

கும்பம் ராசிக்கான அதிர்ஷ்ட கல் :

சனி ஆளும் கும்ப ராசிக்காரர்கள் அணிய வேண்டியது நீலக்கல். ராகு மற்றும் சனி திசை நடப்பவர்களும் நீலக்கல் அணியலாம். இதை அணிவதால் செல்வ வளம் பெருகும். சமூகத்தில் நல்ல செல்வாக்கு உண்டாகும். நமது மீது உள்ள திருஷ்டியைத் தடுக்கும். ஞானம், சாந்தத்தை கொடுக்கும். உடலுக்கு நல்ல ஆரோக்கியத்தை தரும். திருமண உறவை மேம்படுத்தும். வீண் வம்பு, வழக்குகளில் இருந்து நம்மைக் பாதுகாக்கும்.

மீனம் ராசிக்கான அதிர்ஷ்ட கல் :

மீன ராசிக்காரர்கள் அணிய வேண்டியது கனக புஷ்பராகம். வியாழன் திசை நடப்பவர்களும் இதை அணியலாம். இதை அணிந்தால் செல்வ விருத்தியை பெறலாம். துணிச்சல் உண்டாகும். பொருளாதார முன்னேற்றம் கிடைக்கும். திருமணத் தடை நீங்கும். கோபம் குறையும். நிலம், வீடு, வாகனம், வாங்கும் நிலை உருவாகும். பகை, சதி, சூழ்ச்சி ஆகியவற்றில் இருந்து காக்கும். நல்ல நட்பைக் கொடுக்கும்.

ஏழு கிரகங்களுக்கு ராசி ஆளுமைத் தன்மை உண்டு . ஆனால் ராகு கேதுவுக்குத் தனியான ராசி ஆளுமை கிடையாது. ஜாதகரின் திசையைப் பொறுத்து , ராகுவின் திசை நடக்கும் காலத்தில் கோமேதகமும், கேது திசை நடக்கும்  காலத்தில் வைடூரியமும் அணிவதன் மூலம் பாதகமான பலன்களைக் கூட சாதகமாக மாற்றிக் கொள்ளலாம். கோமேதகம் மற்றும் வைடூரியம் அணிவதால் ஏற்படும் நன்மைகளையும் பார்ப்போம்.

கோமேதகம் :

ராகு திசை நடப்பவர்கள் கோமேதகம் அணிவதன் மூலம் இல்லற வாழ்வில்  இனிமை உண்டாகும். சொத்து வகையில் மேன்மை கிடைக்கும். பங்காளிகள் வகையில் உதவி கிடைக்கும். பாரம்பர்ய தொடர்பு கிட்டும். அரசு அனுகூலப் பதவியில் உயர்வைக் கொடுக்கும்.

வைடூரியம் :

கேது திசை நடப்பவர்கள் வைடூரியம் அணிவதன் மூலம் நுண்ணறிவு கிடைக்கும். நரம்பு பலம், சிறந்த ஞானம், புகழ், நற்சிந்தனைகள் உண்டாகும். தான் சார்ந்த துறையில் தனித்தன்மையை எற்படுத்தும்.

ராசிக்கற்களை அணியும் முறை :

கட்டைவிரலில் பொதுவாக மோதிரம் அணிவதைத் தவிர்ப்பது நல்லது. ஆட்காட்டி விரலில் குருவினுடைய புஷ்பராக கல், செவ்வாயினுடைய பவளம் அணிவது நல்லது. நடுவிரலில் நீலம் மற்றும் அமிதிஸ்ட் கல்லை அணிவது நன்மையைக் கொடுக்கும். வைரத்தை மோதிர விரல் அல்லது நடு விரலில் அணிவதால் நன்மைகள் பெருகும். சுண்டுவிரலில் பச்சை அல்லது வைரம் அணிவது சிறப்பு. ராகு கேதுவிற்கு கல் மோதிரம் அணிவது தொடர்பாக ஜாதகத்தைப் பார்த்து முடிவெடுப்பதே சிறந்தது.

என்றும் அன்புடன் :

பொன்னி சுதாகரன்,

பொன்னி அம்மன் ஜோதிட நிலையம்…

Leave a Reply